Wednesday, July 19, 2017

தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?]
(பகுதி : ஒன்பது)
பாலஸ்தீன விடுதலைப் போராட்டம், ஈழ விடுதலைக்கு உந்துசக்தியாக மட்டுமல்ல, உதவும் கரமாகவும், ஆதர்ச முன்னணியாகவும் இருந்து வந்துள்ளது. ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், பாராளுமன்ற அரசியலை நிராகரித்து தான் எழுந்தது. சிறிலங்கா சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இடம்பெறும் தமிழர் விரோத இனக்கலவரங்களை, தமிழ் தேசியக் கட்சிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் ஏற்பட்ட விரக்தி, இரண்டாவது தலைமுறையை ஆயுதபோராட்டம் நோக்கிச் செல்ல தூண்டியது.
பாலஸ்தீனரின் வரலாறும் அதே போன்ற கதைகளை கூறுகின்றது. பாலஸ்தீன தேசியக் காங்கிரஸ் போன்ற கட்சிகள், பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தன. தமிழரசுக் கட்சியினர் போன்றே, பிரிட்டன் அரேபியர் பக்கம் நிற்பதாக நம்பிக் கொண்டிருந்தன. யூத ஆயுதக் குழுக்கள், பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கிய பொழுது, அந்த முன் அனுமானம் ஊர்ஜிதப்படுத்தப் பட்டிருக்கும். எனினும் பாலஸ்தீனத்தில் யூதர்களிடமும், இலங்கையில் சிங்களவர்களிடமும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதென்பது, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் முடிந்த முடிவாக இருந்துள்ளது. ஈழத் தமிழரின் முதலாவது அரசியல் தலைமுறை விட்ட தவறுகளை திருத்தவே தாம் ஆயுதம் என்துவதாக, தமிழ் இளைஞர்கள் கூறினார்கள். பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் தோன்றிய காலத்திலும், அதே மாதிரியான கருத்துகள் முன்வைக்கப் பட்டன.

இன்று யூதர்கள் வாழும் இஸ்ரேலிய நகரங்களில் வாழ்ந்த அரேபியர்கள், ஆயுதமேந்திய யூதர்களால் விரட்டியடிக்கப் பட்டனர். மேற்குக்கரை, காஸா போன்ற பிரதேசங்கள் பாலஸ்தீனரின் "தாயக பூமி" யாகியது. இலங்கையிலும், சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்கள் அடுத்தடுத்த இனக்கலவரங்களால் விரட்டியடிக்கப் பட்டனர். அவர்கள் பெரும்பான்மை தமிழர்கள் வாழ்ந்த வட-கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். இஸ்ரேலிலும், இலங்கையிலும் ஒரே மாதிரியான இனப்படுகொலை இடம்பெற்றது. இஸ்ரேலில் அப்பாவி அரேபிய பொது மக்கள், யூத இனவெறியர்களால் கொலை செய்யப்பட்டார்கள், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள். அரேபியரின் வீடுகள் எரிக்கப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் யூதரால் அபகரிக்கப் பட்டன. இலங்கையில் சிங்கள இனவெறியர்கள், இஸ்ரேலியரின் உதாரணத்தை பின்பற்றினார்கள். இஸ்ரேலில் அரேபியருக்கு நேர்ந்த அதே கொடுமைகள், இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்டன. நிச்சயமாக, ஆரம்ப கால கட்டங்களில், ஈழ விடுதலை இயக்கங்கள் அத்தகைய ஒப்பீடுகளை தமது பிரச்சாரத்தில் இடம்பெறச் செய்தனர்.

1977 ல், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை ஏற்றிக் கொண்டு, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற கப்பலில் சென்ற சிலரிடம் ஆயுதப் போராட்டம் குறித்த சிந்தனைகள் தோன்றின. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு கியூபாவின் உதவியை நாட வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது. அருளர் எழுதிய, "லங்கா ராணி" என்ற நூலில் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகிய காலங்களிலேயே, சர்வதேச விடுதலை அமைப்புகளுடனான தொடர்பின் முக்கியத்துவம் உணரப்பட்டது. இந்தியா தனது பிராந்திய நலன்களுக்காக, ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்தது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், இந்தியாவின் உள்நோக்கம் தெளிவானது. அவ்வாறான சுயநலம் மிகுந்த உலகில், பாலஸ்தீனர்கள் மட்டுமே எதையும் எதிர்பாராமல், தமது ஈழச் சகோதரர்களுக்கு உதவி செய்தார்கள். "லெபனான் பயிற்சி" என்ற பெயரில் பல நூறு தமிழ் இளைஞர்கள் பாலஸ்தீனரின் முகாம்களில் இராணுவப் பயிற்சி பெற்றனர். அன்றைய காலத்தில், இந்தியா வழங்கிய இராணுவப் பயிற்சியை விட, அது உயர்வாகக் கருதப்பட்டது.

ஆரம்ப காலத்தில் இரண்டு அமைப்புகள் மட்டுமே ஆயுதப் போராட்டத்தை முதன்மைப் படுத்தி வந்தன. ஒன்று: இலங்கையில் தலைமறைவாக இயங்கிய தேசியவாத "புதிய தமிழ்ப் புலிகள்". இரண்டு: லண்டனில் வாழ்ந்த மார்க்சிய தமிழ் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட "ஈழப் புரட்சி அமைப்பு" (EROS). பல்வேறு நாடுகளை சேர்ந்த புரட்சியாளர்கள் புகலிடம் கோரியிருந்த லண்டனில், பாலஸ்தீன விடுதலை அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்துவது சிறந்ததாகப் பட்டது. ஈரோஸ் செயலதிபர் ரத்னசபாபதி லண்டனில் இருந்த பாலஸ்தீன தூதுவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார். ஈழ விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த போராளிகளுக்கு பயிற்சி வழங்குமாறு முன்வைத்த கோரிக்கையை, பாலஸ்தீனர்கள் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார்கள். PLO இராணுவ தளபதி அபு ஜிகாத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ், தமிழ்ப் போராளிகள் இராணுவப் பயிற்சி பெற்றனர்.

தமிழ் இளைஞர்கள் பாலஸ்தீனர்களிடம் பயிற்சி எடுப்பது, ஈழத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த இரகசியமாக இருந்தது. பாமர மக்கள் கூட "லெபனான் பயிற்சி" பற்றி பேச ஆரம்பித்தனர். லெபனான் அன்று சிரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சிரிய எல்லையோரமாக உள்ள பால்பெக் எனும் பிரதேசத்திலேயே சர்வதேச பயிற்சி முகாம்கள் அமைந்திருந்தன. அன்று சோவியத் யூனியன், பாலஸ்தீன இயக்கங்களுக்கு (குறிப்பாக PLFP) பெருமளவு நிதியும், ஆயுதங்களையும் வழங்கி வந்தது. அந்த உதவியைக் கொண்டு, மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்த விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. வெனிசுவேலா முதல் ஜப்பான் வரையிலான நாடுகளை சேர்ந்த பல இளைஞர்கள், லெபனானிலும், ஜோர்டானிலும் இருந்த பாலஸ்தீன முகாம்களில் பயிற்சி பெற்று வந்தனர். பாலஸ்தீனர்கள் அதனை சர்வதேச புரட்சியின் ஓர் அங்கமாக கருதினார்கள். இதே கருத்தை தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சி வழங்கிய பாலஸ்தீன முகாம் பொறுப்பாளர்களும் அன்று பிரதிபலித்தனர். "தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரின் ஓர் அங்கமாகும்."

1976 ம் ஆண்டிலேயே பாலஸ்தீனர்கள் இராணுவப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்திருந்தனர். அன்று லெபனான் கூட பாதுகாப்பான பிரதேசமாக இருக்கவில்லை. இஸ்ரேலிய இராணுவம் எல்லை தாண்டி வந்து, லெபனானுக்குள் பாலஸ்தீனர்களுடன் யுத்தம் செய்தது. பயிற்சிக்கு சென்ற தமிழ் இளைஞர்களும், தமது பாலஸ்தீன தோழர்களுடன் இணைந்து இஸ்ரேலிய படையினரை எதிர்த்து சண்டையிட்டார்கள். பாலஸ்தீன- ஈழ சகோதரத்துவம் அன்றே இரத்தத்தால் எழுதப்பட்டது. மிகவும் காலந்தாழ்த்தி, அதாவது 1983 ல், இந்தியா தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சி வழங்கியது. அது வரையில் பாலஸ்தீன பயிற்சி பெற்றவர்களே ஈழ மண்ணிலும் பயிற்சி முகாம்களை நிறுவினார்கள். பாலஸ்தீன தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்த ஈரோஸ், அன்று ஈழத்தில் இராணுவப் பிரிவை வைத்திருக்கவில்லை. அதற்கு பதிலாக வவுனியா காட்டினுள், புலிகள் இராணுவப் பயிற்சி கொடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். விடுதலைப் புலிகள் இயக்க ஸ்தாபகர்களில் ஒருவரான உமாமகேஸ்வரன் பாலஸ்தீன பயிற்சி பெற்றவர். அவர் பின்னர் புலிகளிடம் இருந்து பிரிந்து சென்று, PLOT என்ற இயக்கம் அமைத்ததும், பாலஸ்தீன பயிற்சியாளர்களுடன் தனியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.

சிறிலங்கா இராணுவம் வன்னியில் புரிந்த தமிழ் இனப் படுகொலைகளை கண்டித்து குரல் எழுப்பிய உலகப் புகழ் பெற்ற பிரபலங்களில், மாயா அருட்பிரகாசம் ஒருவர். பிரிட்டிஷ் தமிழரான மாயா உலகம் முழுவதும் பிரபலமான இசைக் கலைஞர். அவர் தனது பாடல்கள் மூலம், விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும், பாலஸ்தீனரின் போராட்டத்தையும் ஆதரித்து வந்தார். இதனால் மாயா புலி ஆதரவாளர் என்று, இலங்கை அரசு சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது. மறு பக்கத்தில் மாயா பாலஸ்தீன ஆதரவாளர் என்று, அமெரிக்க அரசு சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் நுழைவதற்கு விசா மறுக்கப்பட்டது. புலிகளாக இருந்தாலென்ன, ஹமாஸ் ஆக இருந்தாலென்ன, அவர்களின் போராட்டம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானதாக கருதப்பட்டது. இந்த விஷயத்தில் அமெரிக்க அரச மட்டத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்கவில்லை. பிரபல பாப் பாடகி மாயாவின் தந்தை அருளர் என அழைக்கப்படும் அருட்பிரகாசம், பாலஸ்தீனர்களிடம் பயிற்சி பெற்ற ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர்.

பாலஸ்தீன பயிற்சி பெறுவதில் சில ராஜதந்திர சிக்கல்கள் ஏற்பட்டன. ஈழத்திற்கான ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகிய காலங்களில் சிறிமாவோவின் அரசு ஆட்சியில் இருந்தது. சிறிமாவோ அரசு PLO வுடன் நல்லுறவைப் பேணி வந்தது. "சிறிலங்கா அரசுக்கு எதிரான தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டாம்" என்று, சிறிமாவோ யாசிர் அரபாத்துக்கு கடிதம் எழுதினார். ஆனால் பாலஸ்தீனர்கள் அந்த கடிதத்தை புறக்கணித்து விட்டு, பயிற்சியை தொடர்ந்தார்கள். மேலும் PLO என்ற கூட்டமைப்பில் அங்கம் வகித்த, மார்க்சிய PLFP தான் மும்முரமாக தமிழர்களுக்கு பயிற்சியளித்து வந்தது. அவர்கள் சர்வதேச கம்யூனிச புரட்சியில் நம்பிக்கை வைத்திருந்தனர்.
இந்தியாவில், அதே கால கட்டத்தில் இந்திரா காந்தியின் அரசு இருந்தது. இந்திரா காந்தி அரசும் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்த போதிலும், தமிழ்ப் போராளிகள் அவர்களிடம் பயிற்சி எடுப்பதை விரும்பவில்லை. 1983 ல், அனைத்து போராளிக் குழுக்களுக்கும் இந்தியா பயிற்சி வழங்கியதற்கு, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் இந்தியாவில் இயங்கிய கம்யூனிச புரட்சியாளர்கள், அல்லது பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுவதையும் இந்திய அரசு விரும்பவில்லை.

ஈழ விடுதலைப் போராட்டம், இந்திய நலன்களுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டுமென்பதில், இந்திய அரசு ஆரம்பத்தில் இருந்தே அவதானமாக இருந்து வந்துள்ளது. இறுதியில் இந்தியா எவ்வாறு ஈழ விடுதலை அமைப்புகளை கைவிட்டதோ, அதே போன்று ஜோர்டான் போன்ற அரபு நாடுகள் பாலஸ்தீன விடுதலை அமைப்புகளை கைகழுவி விட்டன. "எமது விடுதலையை நாமே வென்றெடுக்க வேண்டும்." என்பதை பாலஸ்தீன-ஈழ விடுதலை அமைப்புகள் காலந்தாழ்த்தி புரிந்து கொண்டன.
(தொடரும்)

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:

8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு

6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

4 comments:

sivakumar said...

//பயிற்சிக்கு சென்ற தமிழ் இளைஞர்களும், தமது பாலஸ்தீன தோழர்களுடன் இணைந்து இஸ்ரேலிய படையினரை எதிர்த்து சண்டையிட்டார்கள். பாலஸ்தீன- ஈழ சகோதரத்துவம் அன்றே இரத்தத்தால் எழுதப்பட்டது.// சிலிர்ப்பூட்டும் வரலாற்று நிகழ்வுகள். பாலஸ்தீனர்கள் தமது கொள்கைக்காக தமிழர்க்குப் பயிற்சியளித்தார்கள், இஸ்ரேல் தமது ஆயுத வணிகத்துக்காகப் பயிற்சி அளித்தது. முஸ்லிம்கள் என்பதற்காக பாலஸ்தீனர்களை வெறுப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஆக்கிரமிப்புக்கும், இனப்படுகொலைக்கும் எதிராகப் போராடிய, போராடும் ஈழமும், பாலஸ்தீனமும் பேரழிவில் புதைந்தது வேதனையிலும் வேதனை. வரலாற்றை மிகவும் எளிய முறையில் தொகுத்து என்னைப்போன்றவர்கள் புரிந்துகொள்ளுமளவுக்கு எழுதிவரும் கலையரசனுக்கு நன்றிகளும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்களும்.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

மிகவும் சிறப்பு!

RMD said...

//எமது விடுதலையை நாமே வென்றெடுக்க வேண்டும்." என்பதை பாலஸ்தீன-ஈழ விடுதலை அமைப்புகள் காலந்தாழ்த்தி புரிந்து கொண்டன.//
அருமையான பதிவு

Anonymous said...

உங்களிடமிருந்து பயனுள்ள பலவற்றை அறிந்துகொள்ளமுடிகிறது. நன்றி.

இந்திய அரசு போராளிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்க முன்வந்ததற்கான காரணமாக நீங்கள் குறிப்பிட்டதும் சரியாக இருக்கலாம். இதன்மூலம் இந்திய அரசு, இலங்கை அரசையும் போராளிக் குழுக்களையும் தன் வலைக்குள் இழுத்துக் கொண்டது. இறுதியில் தனது நலனை இலங்கையில் ஊன்றிக்கொண்டுவிட்டது.